ஸ்டாலின்தான் அடுத்த திமுக தலைவர்.. செயற்குழுவில் வெளிப்படையாக பேசிய நிர்வாகிகள்!
திமுக செயல்தலைவர் ஸ்டாலின்தான் அடுத்த திமுகவின் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் திமுக நிர்வாகிகள் திமுக செயற்குழு கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின்தான் அடுத்த திமுகவின் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் திமுக நிர்வாகிகள் திமுக செயற்குழு கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்டாலின் அடுத்த தலைவர்
இந்த கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் இன்று ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசினார்கள். ஸ்டாலின்தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள். அதேபோல் பொதுக்குழுவில் உள்ள நிர்வாகிகள் எல்லோரும் ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ பேச்சு
இதில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மிகவும் கோபமாக பேசினார். அதில் ''நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும். ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். யார் எல்லாம் மெரினாவில் இடம் தரமாட்டோம் என்று சொன்னார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே இடம் இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
டி ஆர் பாலு பேச்சு
முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு, நம்மை வழி நடத்துகிற அனைத்து அம்சங்களும் ஸ்டாலினுக்கு உள்ளது. கருணாநிதி இறந்த அன்று இரவே எங்களுக்கு தெரிந்துவிட்டது. தலைமைக்குரிய பண்பு ஸ்டாலினிடம் உள்ளது. மெரினாவில் விஷயத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவுகள் தலைமை பண்புக்கு சான்று. அவர்தான் நம் தலைவர் என்றுள்ளார்.
வி.பி.துரைசாமி பேச்சு
திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் வி.பி.துரைசாமி பேசியதும் வைரலாகி உள்ளது. அவர் , பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைத்தும் இனிமேல் ஸ்டாலின் தான். அவர்தான் அடுத்த திமுக தலைவர். இப்போது திமுகவில் அந்த பொறுப்பிற்கு தகுதியான நபர்கள் யாருமே கிடையாது. நாம் தலைவரை கண்டுவிட்டோம் என்றுள்ளார்.