ஆர்.கே.நகரில் கண்டன கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
ஆர்கே நகரில் கண்டன கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. வருமான வரித்துரை ரெய்டில் டிடிவி.தினகரன் கோஷ்டியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்த திமுக முடிவு செய்தது. ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை.
இந்நிலையில் கண்டன கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்துள்ளார். திமுக தாக்கல் செய்த வழக்கு பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.