திமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டனர்: வைகோ குற்றச்சாட்டு
சேலம்: திமுகவினர் வீரபாண்டி ஆறுமுகத்தை மறந்து விட்டதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வைகோ. அப்போது அவர் பேசியதாவது:-
சேலத்தையும் என்னால் மறக்க முடியாது. அது போல் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகத்தையும் என்னால் மறக்க முடியாது. அவர் எனது அன்பு நண்பர். என்னை தி.மு.க. நீக்கிய போதும் என்னை நீக்க கூடாது என கேட்டு கொண்டவர். என்னை சேலத்திற்கு அழைத்து வந்து கூட்டங்களை நடத்தி சிறப்பித்தவர். தி.மு.க. உருவாக காரணமாக இருந்த ஊர் சேலம்.

நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட போது என்னை ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 20 போலீசார் அழைத்து வந்தனர். அப்போது பசி எடுத்தது. இதனால் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சாப்பிட்டோம். பின்னர் என்னை போலீசார் சிறையில் அடைத்தனர். போலீசார் என்னுடன் வந்த சிலமணி நேரத்தில் என்னுடன் பழகி விட்டனர். அவர்கள் உங்களுக்கா சிறை என கூறி வருத்தப்பட்டனர். நான் இங்கு அடைக்கப்பட்ட போது வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். வீரபாண்டி ஆறுமுகம் மரியாதைக்கு உரியவர். அவர் தற்போது இல்லை. அவரை தி.மு.க.வினர் தற்போது மறந்து விட்டனர். அவரது சிலைக்கு கூட மாலை அணிவிக்கவில்லை.
தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்திற்கு சென்றபோது அவர் கார் மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுவிடம் கேட்டு கொண்டுள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசுக்கு பொதுமக்கள் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்யுங்கள். அவர் உங்களுக்காக போராடுவார், உங்களுக்காக உழைப்பார். அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று தருவார்' என இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications