இந்த நோட்டீஸ் உண்மையாக இருக்குமா சார்?
சென்னை: திமுக இளைஞரணி துணை செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதிமுகவினர் ஒரு கடிதத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள அக்கடிதத்தில்,
தூத்துக்குடி திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவலே தெரிவிக்காமல் ஜோயல் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துகிறார். எதற்கெடுத்தாலும் எப்போதும் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்துகிறார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க தொடர்புகொண்டாலும் போன் எடுக்காமல் தவிர்க்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார்களுக்கு 3 நாட்களுக்குள் விளக்கம் தராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் நகல்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் பெரியசாமி, தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதா ஜீவன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் பரபரப்பின் போதே மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் ஜோயல். வைகோவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஜோயலும் ஒருவர். பின்னர் ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக ரூ50 லட்சமும் கொடுத்திருந்தார். கட்சியில் சேர்ந்து சில மாதங்களேயே ஆன நிலையில் அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications