சட்டசபையில் அமளி துமளி… திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்டப்ரேவையில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை படித்த பிறகு துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து நின்று தி.மு.க. சார்பில் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்க வில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். சபையில் இருந்து வெளியேறிய பிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், தமிழகத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த மிக அவசரமான தீர்மானங்களை எதிர்க்கட்சிகள், சபையில் கொண்டு வரலாம், அதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டமன்ற விதி உள்ளது.

நாங்கள் 35க்கும் மேற்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை சபாநாயகரிடம் கொடுத்து உள்ளோம். பூரண மது விலக்கு, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது, டெங்கு காய்ச்சல் இறப்பு போன்ற கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்தும் இதில் ஒன்றை கூட சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்து கொள்ளவில்லை. ஆளும் கட்சியினர் கொடுக்கும் ஏதாவது ஒரு சாதாரண கவன ஈர்ப்பு தீர்மானத்தை மட்டும் எடுக்கிறார்கள். நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் முடிகிறது. எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினேன். ஆனால் சபாநாயகர் ஆய்வில் இருக்கிறது என்ற பதிலை மட்டும் சொல்கிறார்.
சபாநாயகர் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவராக இல்லாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செயல்படுகிறார். நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் போன்ற மானிய கோரிக்கை விவாதம் ஏற்கனவே முடிந்து விட்டன. அதற்கான தொகையும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் முதல்வர் இன்று 110-வது விதியின் கீழ் ஏற்கனவே தொகை ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிடுகிறார். இதற்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? நிதி ஆதாரம் என்ன? என்பதை நிதித்துறை செயலாளர் அறிக்கை மூலம் தெரிவிப்பாரா?
110-வது விதியின் கீழ் முதல்வர் இதுவரை 750 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதாக சபாநாயகரே தெரிவித்து உள்ளார். ஆனால் அவை நிறைவேற்றப்படுவதில்லை. எனவே இவற்றை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார். இதேபோல் பா.ம.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சியினரும் கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். அப்போது திமுக தலைவர்கள் பற்றி அதிமுக உறுப்பினர் வெங்கட்ராமன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.எல்.ஏ வெங்கட்ராமன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே, சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட அனைத்து திமுக உறுப்பினர்களையும் கூண்டோடு வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழக சட்டசபையில் ஜனநாயகம் செத்துவிட்டது என்றார். அதிமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்றும் தெரிவித்தார். திமுக குறித்து அதிமுக உறுப்பினர் அவதூறாக பேசினார். அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு நாங்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என்றும், திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காமல் வெளியேற்ற உத்தரவிட்டதாகவும் துரைமுருகன் புகார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications