கருணாநிதி குறித்து சர்ச்சைக் கருத்து.... சட்டசபையில் திமுக அமளி!
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கருணாநிதி குறித்து காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கூச்சலிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வாட்ஸ்அப்பில் ப்ளஸ் டூ வினாத்தாள் வெளியான வெளியான விவகாரம் குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

செங்குட்டுவன் (தி.மு.க.)
ஓசூரில் ப்ளஸ் டூ தேர்வின் போது வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் அனுப்பப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி விசாரணை
மாவட்ட கல்வி அதிகாரியே காரணமாக இருந்து இருப்பது கல்வி துறையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதேபோல டெல்லிபாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), பிரின்ஸ் (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் பேசினார்கள்.
அமைச்சர் விளக்கம்
இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்துப் பேசினர்
ஓசூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தேர்வு மையங்களில் ஒன்றான பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 இணைப்பு பள்ளிகளை சேர்ந்த 323 மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18ஆம் தேதி கணிதம் மற்றும் விலங்கியல் பாடங்களை கொண்ட மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இதை கண்காணிக்கும் பணியில் ஓசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் ஈடுபட்டனர். 11 மணியளவில் அந்த மையத்தின் அதிகாரி சீனிவாசன் பார்வையிட்ட போது 2 ஆசிரியர்களின் கையிலும் செல்போன் இருப்பதை கண்டார்.
அதை வாங்கி ஆய்வு செய்தபோது கணிதபாட கேள்வி தாள்களில் சில பக்கங்கள் வாடஸ் அப் மூலம் வேறு போனுக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக 2 ஆசிரியர்களையும் கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி மூலம் கிருஷ்ணகிரி போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் விஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கல்வி நிறுவனங்களை சேர்ந்த கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி ஆகியவற்றில் செயல்படும் 4 தேர்வு மையங்களுக்கு வேறு மாவட்டத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அரசு தேர்வு இயக்குனர் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் ஓசூர் கல்வி மாவட்ட அதிகாரி வேதக்கண் தன்ராஜ், புச்சுசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் மாவட்ட கல்வி இளநிலை உதவியாளர் ரமணராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இனிவரும் தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனைத்து அலுவலகங்களுக்கு விவரமான அறிக்கை மற்றும் வழிகாட்டுதலை அனுப்பி உள்ளார். அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications