திருச்சியில் களைகட்டிய திமுக மாநாடு- லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!!
திருச்சி: திருச்சியில் தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிராட்டியூர் தீரன் நகரில் உள்ள 250 ஏக்கர் திடலில் நடைபெறும் மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தொண்டர்களின் திரளான வருகை கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டை முகப்பு
மாநாட்டுத் திடலில் செங்கோட்டை வடிவில் முகப்பு நுழைவாயிலும், பார்லிமெண்ட் வடிவில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காத கூட்டம்
இன்று காலை சரியாக 9.15 மணிக்கு திருச்சி சங்கம் ஹோட்டலில் இருந்து புறப்பட்ட அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மாநாடு வரவேற்பு குழு தலைவர் முன்னாள் அமைச்சர் நேருவுடன் வந்து கருணாநிதிக்காக மாநாட்டு திடலில் காத்திருந்தார். அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கவே, மு.க.ஸ்டாலின் கொடிக்கம்ப பீடத்தின் மீது ஏறி தொண்டர்களை கட்டுப்படுத்தினார்.
மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த வாகனங்கள்
லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துதான் வர முடிந்தது. 10.50க்கு மாநாட்டுத் திடலுக்கு வந்த தலைவர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் காரில் இருந்தபடியே 91 அடி உயரம் கொண்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் நினைவு கொடிமேடையில் அமைக்கப்பட்ட கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். அதன் பிறகு மாநாட்டு திடலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பிரம்மாண்ட மேடை
மாநாட்டு திடலில் பிரமாண்ட பந்தல், மேடை, மேடையிலேயே தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் தங்க வசதியாக, ஏழு அறைகள் கான்கிரீட் கட்டிடங்களால் அமைக்கப்பட்டுள்ளன.
ஹைடெக் குடில்கள்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்குவதற்கு கோபாலபரத்தில் உள்ள கருணாநிதியின் இல்ல வடிவில் தனித் தனியே 2,500 சதுர அடியில் ஏ.சி., சோபா, நவீன கழிவறை கொண்ட ஹைட்டெக் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இனியவை நாற்பது
தி.மு.க. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு பிரமாண்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அனைவரையும் கவரும் வகையில் 100 அடி நீளத்தில் இனியவை நாற்பது, பாராளுமன்றத்தில் நாற்பது என்ற தலைப்பில் தொட்டியம் ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு வைத்துள்ள பிளக்ஸ் பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
செம்மொழி மாநாடு நினைவு
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இனியவை நாற்பது என்ற தலைப்பில் தமிழர் காலச்சாரம், பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனி கொடுத்தல், வள்ளுவர் கோட்டம், அரசர்கள் உள்பட பல்வேறு வகையான பிரம்மாண்ட அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இவை அனைத்தையும் பார்த்து மக்கள் பிரமித்து போயினர்.
கே.என். நேருவிற்கு மரியாதை
இந்த இனியவை நாற்பது வாகன ஊர்தி அணி வகுப்பு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேரு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை நினைவு படுத்தும் வகையில் திருச்சி மாநாட்டு திடலில் 100 அடி நீளமுள்ள பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாற்பது
அதில் இனியவை நாற்பது தலைப்பில் இடம்பெற்ற அனைத்து ஊர்திகளின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. மேலும் மேலும் வாழும் தமிழே, செம்மொழி மாநாட்டில் தங்களால் கண்டது இனியவை நாற்பது, வளரும் தமிழே, திருச்சி மாநாட்டில் உங்களால் காணப்போவது பாராளுமன்றத்தில் நாற்பது, இவ்விரண்டும் ஏற்று நடத்தும் நேருவின் அழைப்பை எற்று அனைவரும் வாருங்கள் என்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டர்களுக்கு வசதி
தொண்டர்கள் வசதிக்காக, 78 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 550க்கும் மேற்பட்ட கழிவறைகளும் குளியலறைகளும், திறக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுக மாநாட்டில் திரண்டுள்ளதால் திருச்சியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நுழைவுக் கட்டணம் வசூல்
மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொண்டர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ.50ம் பெண்களுக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது.
திமுக மாநாட்டால் திருச்சி திருவிழாக்கோலத்தில்....