"நோ நோ சொல்லுதே நோக்கியா" "போறேன்னு சொல்லுதே போர்டு கம்பெனி": அசத்திய தி.மு.க. முழக்கங்கள்!!
சென்னை: நில ஆர்ஜித மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசு, ஆதரித்த மாநில அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வுக்கே உரித்தான சுவாரசியமான அடுக்கு மொழி வசனங்கள் அனைவரையும் ஈர்த்தது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராகவும், தமிழக வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் தொடர்புடையோரை கைது செய்யவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "நாங்கள் நூறு நூறாக கொள்ளையடித்ததாக சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். ஆவின் பால் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தில் ஊழல் என ஆயிரம் கோடி, ஐந்தாயிரம் கோடி என சொல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுக்கட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம்" என்றார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் எழுப்பிய சுவாரசிய முழக்கங்கள்:
கலைஞர் கொண்டு வந்த நோக்கியா
கலைஞர் கொண்டு வந்த நோக்கியா
சொல்லுதே சொல்லுதே
நோ நோ சொல்லுதே
அ.தி.மு.க. ஆட்சியில்
நோ நோ சொல்லுதே!
போகப்போறேன்னு சொல்லுது
போகப்போறேன்னு சொல்லுது
போர்ட் கம்பெனி
போகப்போறேன்னு சொல்லுது
அ.தி.மு.க. ஆட்சியில்
போகப்போறேன்னு சொல்லுது!
என்பதுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்; நில ஆர்ஜித மசோதாவை கைவிடுக ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications