"ஜெயலலிதா அள்ளிவிடும் புளுகு மூட்டைகளை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்".. மு.க.ஸ்டாலின் பேச்சு..
சென்னை: ஜெயலலிதா அள்ளிவிடும் புளுகு மூட்டைகளை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நான்தான் வித்திட்டேன் என்று வாய்க் கூசாமல் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு எப்படி மனசு வந்தது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களின் கனவான மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை ஆலந்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது...
தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை போல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட திட்டத்தை சொல்ல முடியுமா?
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால், இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காணொலி காட்சி மூலம் அதனை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
2006ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டத்தை சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்த்துப் பேசினார். மெட்ரோ ரயில் போன்ற உருப்படாத திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இந்த திமுக அரசுக்கு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதை சொன்னது 2006ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா.
ஆனால் இப்போது, இந்த திட்டத்திற்கு நான்தான் வித்திட்டேன் என்று வாய்க் கூசாமல் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு எப்படி மனசு வந்தது?
ஜெயலலிதா அள்ளிவிடும் புளுகு மூட்டைகளை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள். மக்களுக்காக நான் என்று கூறும் ஜெயலலிதா, இனி என்னால் நான் எனக்குள் நான் என்று கூறுவதுதான் அவருக்கு பொருத்தமானது.
இவ்வாறு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.