பான் மசாலா, குட்கா விற்பனைக்கு அமைச்சர் லஞ்சம்.. சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
சென்னை : பான் மசாலா, குட்கா விற்பனைக்காக லஞ்சம் பெற்றவர்கள் குறித்த விவாதிக்க சட்டசபையில் அனுமதி அளிக்காததால் அதனை கண்டிக்கும் வகையில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழகத்தில் உயிருக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து பேச சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளது.
மேலும் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் இது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் தனபால் பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வந்த செய்தியை வைத்து விவாதிக்க முடியாது என்றும் கூறினார்.
இதனையடுத்து தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் திமுக தற்காலிகமாக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் இருந்து வெளியே வந்த திமுக உறுப்பினர்கள் தலைமைச் செயலக 4வது எண் நுழைவு வாயில் அருகே நின்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திமுகவைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தாலும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்பதற்காக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு சென்றனர்.