ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல்- சோனியா மூலம் கர்நாடகா அரசுக்கு திமுக நெருக்கடி?
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான அஸ்திரங்களை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கூட்டல் பிழைகள் இருப்பதால் அவர் தவறான தீர்ப்பு வழங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
கர்நாடகா அரசு வழக்கறிஞரான ஆச்சார்யாவும் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்பிரமணியன் சுவாமியோ கர்நாடகா அரசுக்கு கெடு விதித்து காத்துக் கிடக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழக்கறிஞர்கள் குழு டெல்லி செல்ல இருக்கிறது. டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரையும் சந்தித்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதற்கான நெருக்கடிகளை ஸ்டாலின் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி அமையும் எனக் கூறப்படும் நிலையில் நடைபெறக் கூடிய இந்த சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.