எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் திமுக வெற்றி பெறும்.. சொல்வது தேமுதிக கொ.ப.செ
சென்னை: எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டாலும், திமுக வெற்றி பெறுவது உறுதி என்று நற்சான்றிதழ் கொடுத்தார் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார்.
மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக இணைந்ததால் தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெடித்துள்ளது. நாளை மதியத்திற்குள் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை தேமுதிக அறிவிக்க வேண்டும் என்று கட்சி கொறடாவும், கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் எம்.எல்.ஏ தலைமையிலான 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்த்துக்கு கெடு விதித்துள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் சந்திரகுமார். அப்போது சந்திரகுமார் கூறியதாவது: ஜெயலலிதாவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று பல பொதுக்கூட்டங்களில் விஜயகாந்த் பேசிவந்தார்.

ம.ந.கூ கூட்டணி
இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு, கடந்த 10ம் தேதி தனித்து போட்டி என அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து விஜயகாந்த்தை சந்தித்து நான் அதிருப்தியை தெரிவித்தேன். திடீரென யாருக்கும் தெரியாமல், 23ம் தேதி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி என அறிவித்துவிட்டார்.

95 சதவீதம் விருப்பம்
தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களின்போதும், வேட்பாளர் நேர்க்காணலின்போதும், 95 சதவீதம் பேர் தேமுதிக, திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினர். நேர்காணலின்போது பங்கேற்றவர்களிடம், திமுகவோடு கூட்டணி பற்றி பேசிவருவதாக கூறிவந்தார் விஜயகாந்த்.

குமுறல்
ஆனால், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களின் மனநிலையை மறந்து, விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். இதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த தொண்டர்களும் இதற்காக எங்களிடம் குமுறுகிறார்கள்.

இறுதி கிடையாது என்றார்
என்னிடம் கடைசியாக பேசியபோதுகூட, வேட்புமனுவை வாபஸ் பெறும் வரை கூட்டணி பேச முடியும், எனவே அமைதியாக இருங்கள். மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டது இறுதி கிடையாது என்று விஜயகாந்த், கூறியதால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.

மாநாடு முடிவு
இதுவரை எங்களை பொறுமையாக இருங்கள் என்று கூறிவந்த விஜயகாந்த், திடீரென தனது ஆண்டாள்-அழகர் கல்லூரியில் மக்கள் நல கூட்டணி மாநாட்டை நடத்துங்கள் என்று அறிவித்தார். மக்கள் நல கூட்டணியில்தான் இனி தொடருவார் என்பது உறுதியாகிவிட்டது என்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். எனவேதான் இப்போது பத்திரிகையாளரை சந்திக்கிறோம்.

விலகவில்லை
தேமுதிகவில் இருந்து நாங்கள் யாரும் இன்னும் விலகவில்லை. நாங்கள் செதுக்கிய சிற்பம்தான் தேமுதிக. எங்கள் தலைவர் கேப்டனை இதுவரை நேரடியாக சந்தித்து பேசிவந்தோம். இப்போது, பத்திரிகையாளர்கள் வழியாக விஜயகாந்த்திடம் வேண்டி, விரும்பி மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம், திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

திமுக ஆட்சியை பிடிக்கும்
இப்படி சொல்வதால் திமுகவோடு சேர்ந்தால்தான், அந்த கட்சி வெற்றிபெறுமா? திமுக பலவீனமாக உள்ளதா என்று யாரும் கேட்க கூடும். நான் அப்படி கூறவில்லை. எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும், திமுக ஆட்சியை பிடித்து, கலைஞர் (கருணாநிதி) முதல்வராவார்.

வீட்டுக்குள் இருக்கிறார்கள்
விஜயகாந்த், பிரேமலதா வீட்டுக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அப்படியல்ல. கிராமம் கிராமமாக மக்களோடு தோளோடு, தோள் சேர்த்து, பழகுபவர்கள்., எனவே எங்களுக்குத்தான் கள நிலவரம் தெரியும். எனவே தேமுதிக இப்போது எடுத்துள்ள முடிவு தற்கொலைக்கு சமமானது.

நாளை வரை கெடு
தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டால்தான் தேமுதிக இயக்கத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். நாளை மதியம் வரை விஜயகாந்த்துக்கு காலம் தருகிறோம். அதற்குள் அவர் எங்களை சந்தித்து பேசுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.

கேப்டன், அண்ணியார்
பேட்டியின்போது, கேப்டன், அண்ணியார் என்றுதான் விஜயகாந்த்தையும், பிரேமலதாவையும் குறிப்பிட்டு சந்திரகுமார் பேசினார். விஜயகாந்த்தின் மனசாட்சி என்று கூறும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications