டிவி சேனல்களில் ரஜினிகாந்த் ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம்: ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர்!
தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவரது அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு பர தொலைக்காட்சிகள் அதனடிப்படையில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி ஆதரவாளர் என பலர் பங்கேற்று வருகின்றனர்.
தொலைக்காட்சி விவாதங்களில்
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்டதில்ல
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்று வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
நியமனம் செய்யப்படவில்லை
ஏற்கனவே தலைவர் ரஜினிகாந்த் கூறியது போல் மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல் கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்க செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டு கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தொலைக்காட்சிகளுக்கு..
தலைவர் ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதத்தில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.