எங்களுக்கு சசிகலா வேண்டாம்… அதிமுக பெண் தொண்டர்கள் ஆவேசக் குரல்
ஜெயலலிதா மறைந்த உடன் சசிகலாவிற்கு எதிராக அதிமுக பெண் தொண்டர்கள் ஆவேசக் குரலை எழுப்பியுள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக பெண் தொண்டர்கள் எங்களுக்கு சசிகலா வேண்டாம் என்று ஆவேசமாக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்து நேற்று 11.30 மணியளவில் காலமாகியுள்ள ஜெயலலிதா, கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றிருந்தார். தொடக்கத்தில் இருந்தே அவருடன் இருப்பவர் சசிகலா நடராஜன். பல்வேறு சிக்கல் ஏற்பட்ட போதிலும் உடன் இருந்து வருபவர் அவர் தான். பல முறை ஜெயலலிதா சசிகலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும், மீண்டும் இருவரும் சேர்ந்து கொள்வார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட பின்னரும் அருகிலேயே இருந்து வருகிறார் சசிகலா. முதல்வரின் உடலைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும், ஜெயலலிதாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத துயரத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள எம்.ஜி.ஆர் சமாதியின் அருகில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு குவிந்துள்ள மகளிர் அணியினர் திடீரென ஆவேசமாக கோஷமிடத் தொடங்கினார். அப்போது எங்களுக்கு சசிகலா வேண்டாம் என்றும் கூடவே இருந்து குழி பறித்தவர் சசிகலா என்றும் ஆவேசமாக பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.