எஸ்சி பிரிவினருக்கான நிலத்தில் குடியிருக்கீங்களா.. எத்தனை வருசம் ஆனாலும் ஆபத்து தான்.. தீர்வு என்ன?
ஊட்டி: எஸ்சி பிரிவினருக்கு வழங்கிய நிலத்தில் குடியிருக்கீங்களா.. எத்தனை வருசம் ஆனாலும் ஆபத்து தான். ஏன் என்பதற்கு விளக்கம் , நடிகை பூஜா பட் வாங்கிய நிலத்தின் மீதான வழக்கு தான். இதனை பாருங்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பட்டியல் இன பிரிவைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அன்றைய நீலகிரி மாவட்ட கலெக்டர் வழங்கி இருந்தார்.

இந்த நிலம் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே இந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி இந்த நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு குப்பன் விற்றிருக்கிறார். அதன்பிறகு சுப்பிரமணி ராமசாமி என்பவருக்கு விற்றுள்ளார்.
இ்வ்வாறு பலர் வாங்கி இறுதியாக இந்த நிலத்தை கடந்த 1990-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார். இந்நிலையில் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "எஸ்.சி., பிரிவினருக்காக வழங்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜாபட் வாங்கியது செல்லாது. இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும்" என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
இந்த வழக்கு என்றில்லை, எந்த வழக்கிலும் இதே போன்று தான் தீர்ப்பு வந்துள்ளது. எஸ்சி பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்பட்ட இடம் அல்லது நிலத்தை அவர்கள் வேறு யாருக்கும் விற்க முடியாது. ஏனெனில் நிலம் வழங்கும் போதே வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும்.
அப்படி நிபந்தனை விதிக்கப்பட்ட நிலத்தை அல்லது வீட்டை வாங்கியிருந்தால், அரசின் கவனத்திற்கு வரும் வரை அனுபவிக்கலாம். ஒருவேளை அரசின் கவனத்திற்கு வந்து அந்த நிலத்தை அல்லது இடத்தை திரும்பவும் எடுத்துக் கொண்டால் ஒன்றுமே செய்ய முடியாது.
அதேநேரம் சில நிலங்களை எஸ்சி பிரிவனருக்கு மட்டும் விற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு விற்க கூடாது என்று நிபந்தனைகள் கூட விதிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட நிலங்கள் அல்லது வீட்டில் நீங்கள் இருந்தால் பட்டியல் இனத்தவர்களிடமே விற்றுவிடுவது நல்லது. ஏனெனில் பின்னாளில் அரசின் கவனத்திற்கு வந்து உங்கள் வீடு அல்லது நிலததை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வாய்ப்பு உள்ளது.
இதேபோல் இன்னும் சில சிக்கல்கள் நிலம் வாங்குவதில் உள்ளது. நீங்கள் வாங்கும் நிலம், பஞ்சமி நிலம் என்றால் தயவு செய்து வாங்கிவிடாதீர்கள். அதேபோல் கள்ளர் நிலம் என்றால் அவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்படி என்ன வகை நிலம், யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம். சட்ட ரீதியாக சிக்கல் இல்லையா என்பதை வழக்கறிஞரிடமும், நிலம் எந்த வகை என்பதை நீங்கள் நிலம் வாங்கும் ஊரின் விஏஓவிடமும் கேளுங்கள். இரண்டு பக்கமும் சரி என்றால் மட்டும் வாங்குங்கள். இல்லாவிட்டால் வங்கியில் வீடு கட்ட கடன் வாங்க முடியாது. பின்னாலில் சிக்கல்களையும் சந்திக்கலாம்.












Click it and Unblock the Notifications