’அதையெல்லாம்’ நான் பார்க்கறேதில்லை... நீங்களும் பார்க்காதீங்க: தொண்டர்களுக்கு "கேப்டன்" அட்வைஸ்
திருவாரூர்: பத்திரிகை, வாட்ஸ் அப் தகவல்களை எல்லாம் தானும் பார்ப்பதில்லை, தனது தொண்டர்களையும் பார்க்கச் சொல்வதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் வருடா வருடம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

வித்தியாசமான கெட்டப்...
பச்சை நிற குற்றாலத் துண்டை கழுத்தில் போட்டபடி விஜயகாந்த் வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தந்தார். அவருடன் போராட்டம் நடத்தியவர்களும் ஆளுக்கு ஒரு குற்றாலத் துண்டைப் போட்டிருந்தனர்.

விவசாயிகள்...
அப்போது, காவிரித் தண்ணீரை பெற்றுத் தராத தமிழக அரசை கண்டித்து கோஷம் போட்ட விவசாயிகள், ‘காவிரி நீரை உரிமையோடு கேட்டுப் பெற வேண்டிய தமிழக அரசாங்கம் கேட்க மறுக்கிறது' எனக் குற்றம் சாட்டினர். மேலும், ‘2012 -13 ம் நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற வட்டியில்லா வேளாண் கடனுக்கு தற்போது 13 சதவீதம் வட்டி மற்றும் அபராத வட்டி கணக்கிடப்பட்டு விவசாயிகளிடம் கெடுபிடி வசூல் செய்யப்படுகிறது. அவ்வாறு பணத்தைக் கட்ட முடியாத விவசாயிகளை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு முதல் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருவதாகவும்' விவசாயிகள் பேசினர்.

மக்கள் பணம் கொள்ளை...
அதனைத் தொடர்ந்து, அந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசியதாவது :-
அரசு மக்கள் மனதை கொள்ளை கொள்ளனும், மக்கள் பணத்தை அல்ல. அந்தம்மாவுக்கு பால் குடம் எடுக்கிறாங்க, அபிஷேகம் செய்கிறாங்க, அங்கப் பிரதட்சணம் பண்ணுகிறாங்க. ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றும் செய்வது இல்லை.

ஊழல் புரட்சி...
தமிழகத்தில் சொல்லப்படாத மிசா நடைமுறையில் இருக்கிறது. பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி நடக்கப் போவுதுன்னு சொல்றாங்க, ஆனால், இங்கே ஊழல் புரட்சிதான் நடக்கிறது. ஏரி, குளம், ஆறு போல மேட்டூர் அணையும் தூர் வாரப்பட வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு முக்கியத்துவம் அரசுக்கு இப்போது புரிய வேண்டும்' என்றார்.

வாட்ஸ் அப்...
அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் குறித்து அவர் பேசினார். அப்போது, " இந்த பத்திரிக்கை, வாட்ஸ் ஆப், எல்லாம் நான் பாக்குறதும் இல்லை, என் தொண்டர்களிடமும் பார்க்கச் சொல்றது இல்லை. ஏனென்றால் அவையெல்லாம் ஒரு நாள் இருக்கும், ஒரு வாரம் இருக்கும். அதன் பிறகு காணாமல் போய் விடும்' என்றார்.

காய்ந்த நெற்கதிர்கள்...
தனது பேச்சின் முடிவில் நீரில்லாமல் காய்ந்து போன நெற்கதிர்களை தனது கைகளில் எடுத்து எல்லாருக்கும் காண்பித்தார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications