பாலாபிஷேகம் பதிலாக, ரத்த தானம் செய்யுங்கள்.. ரஜினி ரசிகர்களுக்கு பால் முகவர் சங்கம் அன்பு கோரிக்கை
சென்னை: 'கபாலி' திரைப்படம் வெளியாகும்போது, கட்-அவுட்டுக்கு ஊற்றுவதற்காக, பாலை வீணாக்க கூடாது என்று தமிழக பால் டீலர் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில், 1.5 லட்சம் பால் வினியோகஸ்தர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள்.
வெயிலோ, மழையோ அவர்கள் பணி நிற்பதில்லை. ஆனால் விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆனபோது, சில ரசிகர்கள், பாலை திருடி கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதுபோன்ற செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும். பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும்போது ஏற்படும், பால் வீணாதல் பிரச்சினை கவலை தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரத்த தானம்
ரஜினி ரசிகர் சங்கங்களையும் தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் பொன்னுசாமி. பாலாபிஷகம் செய்வதற்கு பதில், ரசிகர்கள் ரத்த தானம் செய்யலாம் என்பது பொன்னுசாமி யோசனையாக உள்ளது.

பெங்களூரில் வழக்கு
ரஜினி பட கட்-அவுட்டுகளுக்கு பால் வீணாகும் நிலையில், அவ்வாறு செய்ய கூடாது என்று ரஜினி அறிவுறுத்த வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்னும் அது விசாரணை கடத்தில் உள்ளது.

மலர் வீச திட்டம்
இந்நிலையில், கபாலி திரைப்படம் வெளியாகும்போது, பால் ஊற்றி அபிஷேகம் செய்வதற்கு பதிலாக மலர் தூவி தங்கள் அபிமானத்தை வெளிக்காட்ட ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலும்
சென்னையில்தான் இதுபோல ரசிகர்கள் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் என்பதில்லை. ரஜினியின், எந்திரன் திரைப்படம் வெளியாகும்போது அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் கூட பாலாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications