உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் படுகொலை.. கண்டுக்காத ராம்தாஸ்.. கடுமையாக கண்டித்த அன்புமணி!
சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கரஹ் படுகொலை செய்யப்பட்டது தவறு என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றுதான் டாக்டர் அன்புமணியின் தந்தையும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் இந்தக் கோரக் கொலை தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து எழுந்து சென்றார். இதை விட முக்கியமான விஷயங்கள் குறித்துக் கூறியுள்ளேன் அதைப் போடுங்கள் என்றும் அவர் அலட்சியமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சட்டசபைத் தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் டாக்டர் அன்புமணி இக்கொலையை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இது நிச்சயம் தவறு. யார் செய்திருந்தாலும் தவறுதான். யார் செய்திருந்தாலும் கொலை கொலைதான். அதை நியாயப்படுத்த முடியாது.
இதுபோன்ற கொலைகள் தடுக்கப்பட வேண்டும். யார் செய்திருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று அன்புமணி கூறியுள்ளார்.