ரூ20,000 கோடி கருப்பு பணம்- பச்சமுத்து மீது ராமதாஸ் அடுக்கிய அடேங்கப்பா குற்றச்சாட்டுகளின் பட்டியல்
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி ரூ72 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிபிஐ விசாரணை கோரியிருந்தார்.
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் விஸ்வரூபமாக வெடித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாமக நிறுவனர் அதிரடியாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்திருந்தார்.

அதில்,
- வேந்தர் மூவீஸ் மதன் மருத்துவக்கல்லூரி இடங்களுக்காக 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பணம் வசூலித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் என்னிடம் முறையிட்டனர்.
- மதன் வாங்கிய பணத்தை பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக சொல்லியுள்ளார். இதன் அடிப்படையில் பச்சமுத்து, மதன்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி இடங்களை மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு பின்னர் அது விற்கப்பட்டு அதன் மூலம் பணம் பச்சமுத்துவிடம் கொடுத்துள்ளதாக மதன் சொல்கிறார். ஆனால் பச்சமுத்து தனக்கும் மதனுக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைகழகம் சார்பில் சென்னை வளசரவக்கம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் மதன் ரூ.200 கோடி பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என கூறியுள்ளனர். தொடர்பே இல்லாத ஒருவரிடம் ரூ 200 கோடி பணம் எப்படி சென்றது.? இந்த பணம் மருத்துவக்கல்ல்லுரிக்கு எப்படி வந்தது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
- சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம், திருச்சி மற்றும் சென்னை மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்கள், பல்மருத்துவ இடங்கள், பொறியியல் படிப்புக்கான இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் விற்பனை செய்வதன் மூலமாக மதன், எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி வரை பணம் கொடுத்து வந்துள்ளார்.
- பணவிவகாரம் தொடர்பாக பச்சமுத்து, மதன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் மதன் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
- தலைமறைவாக உள்ள மதன் டெல்லி போலீசாரிடம் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
- 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என ஆண்டுக்கு ஒன்று என கல்வி நிறுவனங்களை தொடங்கி 20 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தொடங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது?
- எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ரூ. 20ஆயிரம் கோடிக்கு மேல் கருப்பு பணம் இருக்கிறது. கருப்பு பணத்தில்தான் அந்த நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
- இன்னும் மற்ற நிறுவனங்கள், 500 சொகுசு பேருந்துகள், மருத்துவமனை, ஓட்டல், தொலைகாட்சி, வார, மாத இதழ்கள் போன்ற 100க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது. அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என தெரியவில்லை.
- எனவே 20 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும். இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும்.
- மருத்துவ படிப்பிற்கான இடங்களை விதிமுறைகளை மீறி விற்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ குழு, பல்கலைகழக மானிய குழு விசாரணை நடத்த மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் முதன்மை வளாகம் 250 ஏக்கர், டெல்லியில் 25 ஏக்கர், ஹரியானாவில் 55 ஏக்கர், சிக்கிமில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அவற்றில் ஏரி புறம்போக்கு இடங்களை வளைத்து எஸ்ஆர்எம் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும்
இவ்வாறு ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக பச்சமுத்து, தாம் நேர்மையாக சம்பாதித்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் பாமகவுக்கு எதிரான ஊடகமாக புதிய தலைமுறை டிவி மாறியது.
தற்போது ராமதாஸ் கூறியபடி மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ72 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது பாமக வட்டாரங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications