சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு... திராவிட இயக்கங்களின் ஏமாற்று வேலை இனி பலிக்காது... பொன்.ராதா
தஞ்சை: சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழியையும், தமிழர்களையும் சீரழித்து வரும் திராவிடக் கட்சிகள், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அழிக்க முயல்வதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்திய - இலங்கை அரசுகள் இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகளை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மத்திய அரசால் தீர்வு காண முடியும்.
சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழியையும், தமிழர்களையும் சீரழித்து வரும் திராவிடக் கட்சிகள், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அழிக்க முயல்கின்றன.
கேரள, கர்நாடக, ஆந்திர மக்கள் ஹிந்தி படிப்பதால், அவர்களது தாய் மொழி அழிந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். தமிழகம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது இல்லை. எனவே திராவிட இயக்கங்களின் ஏமாற்று வேலை இனி பலிக்காது என்று கூறினார்.