டாஸ்மாக் கடை முன்பு குஷ்பு பேச்சு... குபீர் உற்சாகத்தில் குடிகாரர்கள்!
கரூர்: கரூரில் திமுக வேட்பாளர் ம. சின்னச்சாமியை ஆதரித்து நடிகை குஷ்பு அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பு வேனில் நின்றபடி பிரசாரம் செய்ததால் கடைக்குள் குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்கள் பலரும் பாட்டிலும் கையுமாக வெளியில் வந்து குஷ்புவை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். திறந்த வேனில் நின்றபடி அவர் பேசுகிறார்.
கரூரில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னச்சாமியை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அவர் பிரசாரம் செய்தார். சரியாக டாஸ்மாக் கடை ஒன்றுக்கு எதிரே நின்றபடி பேசினார் குஷ்பு.
குஷ்பு வந்திருக்கிறார் என்று கடைக்குள் செய்தி பரவியதும், குடித்துக் கொண்டிருந்த குடிகாரர்களுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சந்தோஷம் ஏறி அத்தனை பேரும் வெளியே ஓடி வந்தனர். பலர் பாட்டிலும் கையுமாக ஓடி வந்து விட்டனர்.
பாட்டிலையும், வாங்கிய வாட்டர் பாக்கெட்டையும் பேன்ட்டிலும், சட்டையிலும் திணித்தபடி குஷ்பு பேசுவதை ஆவலோடு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
குடிக்க வந்த சிலரோ குஷ்பு பேசிட்டு போகட்டும் அப்புறம் போய் குடிக்கலாம் என்று முடிவு செய்து பாட்டிலை மட்டும் வாங்கிக் கொண்டு குஷ்பு பேச்சை ரசித்து முடித்த பிறகு கடைக்குள் போய் ஆற அமர குடித்தனராம்.
குஷ்பு பேசிய இடம் டாஸமாக் கடைக்கு முன்பாக என்பதால் திமுகவினர் பலரும் அதிருப்தியடைந்தனர்.