குடிகார கணவனால் தினம்தினம் தொல்லை - தீக்குளித்த மனைவி, மகள்!
சேலம்: சேலத்தில் தினமும் குடித்துவிட்டு வருகின்ற குடிகார கணவனின் கொடுமை தாங்காத மனைவி, மகள் தீக்குளித்த சம்பவம் அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலாளி கணேசன். இவருக்கு மனைவி சித்ரா மற்றும் ப்ளஸ் 1 வகுப்பு படிக்கும் மகள் நீலா, மகன் விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணேசன், தினமும் குடிபோதையில் மனைவி சித்ராவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் கணவன், மனைவிக்கும் இடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது.
இதில், மனமுடைந்த சித்ரா, அவரது மகள் நீலா ஆகிய இருவரும் நேற்று மதியம் 3.30 மணியளவில் வீட்டை உள்தாழிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.
பற்றியெரிந்த தீயின் தாக்கத்தால், இருவரின் அலறல் சத்தம் கேட்டு மகன் விக்னேஷ் கதவை உடைத்து, தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சித்ரா, அவரது மகள் நீலா இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.