கேட்கும்போதே தலையை சுத்துதே.. சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லையாம்!
சென்னையில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்றும் சென்னையில் வறண்ட வானிலையே நீடிக்கும் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கடந்த மார்ச் மாதமே எச்சரித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங் களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதும், வெப்பம் மேலும் அதிகரித்து, பல 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்ப நிலை பதிவானது. கடந்த மாதத்தில், முந்தைய 17 ஆண்டு களில் இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சென்னையிலும் அதிக பட்சமாக 106 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது. 19 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை விடப்பட்டது. வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டன.

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் நாளை ஆரம்பமாக உள்ளது 28ஆம் தேதிவரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடல் காற்று வீசி வருவதாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருவதாலும் முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை குறைந்து வருகிறது.

வெப்பம் அதிகரிக்கும்
வெப்பநிலை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறினார். உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பு நிலையை விட அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் மழையில்லை
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்றும் சென்னையில் வறண்ட வானிலையே நீடிக்கும் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தகிக்கும் வெப்பம்
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார். இது 107 டிகிரி பாரன்ஹீட் ஆகும். உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது சற்றே ஆறுதலான செய்திதான். ஆனால் சென்னைவாசிகள்தான் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications