விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்:சட்டசபையில் தி.மு.க, காங். வெளிநடப்பு- சி.பி.எம். வெளியேற்றம்!
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து தி.மு.க, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் நாமக்கல் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஜாதி மாறி காதலித்ததால்தான் ஜாதிய வெறியர்களாள் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார் என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின.

பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தை அதிர வைத்த இந்த தற்கொலை வழக்கையும் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று இந்த விவகாரம் எதிரொலித்தது. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயர் போலீஸ் அதிகாரிகள்தான் காரணம் என்பதால் இதுபற்றி சபையில் விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் துரைமுருகன், விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் உண்மைகள் வெளிவராது; சி.பி.ஐ. விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
இதேபோல் விஷ்ணுபிரியா விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களை சடசபையில் இருந்து சபை காவலர்கள் வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications