சேலத்தில் அதிகாலையில் லேசான நில அதிர்வு.. பல பகுதிகளில் உணரப்பட்டது
சேலத்தில் இன்று காலை திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது.
சேலம்: சேலத்தில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
இன்று காலை 7.55 மணி அளவில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உண்டானது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஓமலூர், மேச்சேரி, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களில் உள்ள மக்களும் இந்த நில அதிர்வினை உணர்ந்தார்கள்.
சில வினாடிகள் ஏற்பட்ட நிலஅதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். என்றாலும் பல வீடுகள் இந்த அதிர்வினால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நேரத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் சேலம் மாவட்ட மக்கள் கூடுதல் அச்சத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய நில நடுக்கத்தின் தாக்கமா?
ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான பகுதியில் இன்று அதிகாலையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளே சேலத்திலும் உணரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.