டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 'அடிப்பொடிகள்' மதுரையில் திடீர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு ஆதரவாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் தினகரன் ஆதரவு அதிமுகவினர்.
மதுரை: தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசிடம் வசமாக சிக்கிய டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் ஆதரவு அதிமுக அம்மா அணியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக அம்மா அணியின் சார்பில்,கர்நாடக மாநில பொதுச் செயலாளர் புகழேந்தி தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அணிக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அரசியல் பழிவாங்கல் நடந்துள்ளது.விரைவில் தினகரன் வழக்குகளில் இருந்து வெளியே வருவார்.
எங்கள் மீது வீணாக அவதூறு பரப்பும் ஓபிஎஸ் அணிக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். தினகரனுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சிகள் நடந்துள்ளன. இரட்டை இலையை நாங்கள் மீட்போம் என்று கூறினார்.