லஞ்சப்பணம் ரூ. 1000 கோடி... எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பதுக்கல் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பகீர்
சென்னை: தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெடிகுண்டு வீசியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
அமைச்சர்கள் வாங்கும் லஞ்சப்பணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கும் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கில் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி என்றாலே இப்போதெல்லாம் ஒரே உற்சாகமாகிவிடுகின்றனர் செய்தியாளர்கள். காரணம் அவர் கொடுக்கும் செய்திகள் அப்படி. காரசார பேட்டியோ, காமெடியோ எல்லாமே உற்சாகமாகவே முடிகிறது. இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட ஆளும் அதிமுக அமைச்சர்கள் மீது புதுப்புது குண்டுகளாக வீசினார்.
சிக்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அதிமுக ஆட்சியில் லஞ்ச வேட்டை தலைவிரித்தாடினாலும் சமீபத்தில் கையும் களவுமாக விவசாயத் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிக்கிக் கொண்டதோடு, அமைச்சர் பதவியிழந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அதிரடி வாக்குமூலம்
வேளாண் பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை விசாரணையில் தோண்ட தோண்ட புதையல் கிடைப்பதைப் போல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துறையில் தமிழகம் முழுவதும் 119 ஓட்டுநர் பணியிடங்களுக்கு ரூ1.75 லட்சம் வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அத்தொகை ஜெயலலிதாவுக்கு போய்ச் சேர வேண்டுமென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தியே அத்துறையின் தலைமை பொறியாளரான எம்.செந்திலிடம் வற்புறுத்தியதாக அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதாவிற்கு தொடர்பு
லஞ்ச வேட்டையில் ஜெயலலிதாவுக்கும் பங்கிருக்கிறது. இதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை மட்டும் விசாரித்து நடவடிக்கை எடுத்தால் போதாது. ஜெயலலிதா மீதும் விசாரணை நடத்தவேண்டும். ஆனால், சிபிசிஐடி அத்தகைய விசாரணையை நடத்தாது. எனவே தான் ஊழலின் ஊற்றுக் கண்ணை அறிய பாரபட்சமற்ற மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம். சிபிஐ விசாரணை கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.
அடுத்த குண்டு
அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள்.
வசூல் வேட்டை
தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் சேலம் 5 ரோடு பகுதி கண்ணகி தெருவில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருகிற சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வருமானவரித்துறை சோதனை
இது குறித்து வருமான வரித்துறையும், தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை உடனடியாக சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் அவரது செல்வாக்கு அமைச்சரவையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது என்றும் வெடிகுண்டுகளை வீசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் வீசியுள்ள குண்டுகள் எப்போ? எப்போது வெடிக்குமோ தெரியலையே?