சென்னையில்.. பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆர்வம்.. தனித்தனியே நேரம் கேட்பு..என்ன காரணம்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வரும் 8 ம் தேதி சென்னை வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர். இந்த வேளையில் அதிமுக-பாஜக கூட்டணியில் நிலவும் கருத்து மோதல் நிலவுவதோடு, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே பிரச்சனை இருக்கிறது. இந்த வேளையில் இந்த சந்திப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு நாளை மறுநாள் வர உள்ளார். சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார். அதன்படி சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
அதோடு சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயங்கும் விரைவு ரயில் சேவையையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். மேலும் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து பேச உள்ளார். இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராகி உள்ளார். அவர் பொதுச்செயலாளரான பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
மேலும் அதிமுக-பாஜக கூட்டணி விஷயத்தில் இருகட்சி தலைவர்கள் இடையே கருத்து மோதல் உள்ளது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. டெல்லி தனியார் தொலைக்காட்சியில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக அமித்ஷா கூறிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை பாஜக இன்னும் உறுதி செய்யவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த மோதலுக்கு நடுவே தான் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.

இதேபோல் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஓ பன்னீர் செல்வமும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications