புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி: செங்கோட்டையன் அமைச்சராகிறார்?
தனது புதிய அமைச்சரவையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை:- புதிய முதல்வராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது புதிய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை முதல்வராக பதவியேற்கிறார் பழனிச்சாமி.
புதிய முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.
போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இறுதி செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்க எடப்பாடி பழனிச்சாமியுடன், கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனும் சென்றார். தனது அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் அளித்து விட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா மாலை 4 மணிக்கு ராஜ்பவனில் நடைபெற உள்ளது.
பழைய அமைச்சரவையில் உள்ள மாஃபா பாண்டியராஜன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவிர மீதமுள்ள 30 பேர் இடம் பெறுவார்கள்கள். அமைச்சரவையில் இலாக்காக்கள் மட்டும் மாறாலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இடம் பெறலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.