"எதிரிகளை வெல்ல சிறப்பு பூஜை.." சூரசம்ஹார மூர்த்தியிடம் எடப்பாடி பழனிசாமி செய்த சிறப்பு அர்ச்சனை!
தூத்துக்குடி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் கோயிலில் வழிப்பட்ட நிலையில், அங்கே அவர் சூரசம்ஹார மூர்த்திக்கு எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சில காலமாக அமைதியாக இருந்த அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து மீண்டும் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்த போதிலும், தேர்தல் பணிகளை அதிமுக ஆரம்பிக்க உள்ளது. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல் புகார்களை முன்வைத்து அதிமுக பிரசாரம் செய்ய இருக்கிறது.
சிறப்பு வழிபாடு: இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது என்பது அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பை தந்துள்ளது. அதை வைத்து அதிமுகவின் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். பரபரக்கும் அரசியல் களத்திற்கு நடுவே இன்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். இன்று அவர் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வழிப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு முதல்முறையாக அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்காக இன்று காலை 7.30 மணியளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கே எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூர் வரை திரளான அதிமுகவினர் அவரை வரவேற்றனர்.
சூரசம்ஹார மூர்த்தி: திருச்செந்தூர் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கே அவர் சாமி சாமி தரிசனம் செய்தார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள சூரசம்ஹார மூர்த்தியிடம் வழிபாடு நடத்திய எடப்பாடி பழனிசாமி, அங்கே எதிரிகளை வெல்லக்கூடிய திரிசதி அர்ச்சனையையும் செய்தார்.
சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார சன்னதிகளில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு என பலரும் எடப்பாடி பழனிசாமியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஏன் முக்கியம்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் என்பது சூரனை சம்ஹாரம் செய்த தலம் என்று கருதப்படுகிறது. மேலும், இன்று சஷ்டி திதி நாளாகும். இன்றைய தினத்தில் சத்ரு சம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எதிரிகள் ஒழிவார்கள் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்தச் சூழலில் தான் தனது அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
அதேநேரம் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி அடுத்தாண்டு மக்களவை தேர்தல் குறித்தும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் குறித்து சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தியிருந்தார். அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்பது போலச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்படிக் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications