அதிமுக இணைப்பில் பிரதமர் மோடி தலையீடு இல்லை... ஓபிஎஸ் கூறியது பொய்... எடப்பாடியார் பகீர்
அதிமுக இணைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலையீடு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video
கோவை: அதிமுக இணைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலையீடு இல்லை என்றும் ஓபிஎஸ் கூறியதில் உண்மையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக பிளவுப்பட்ட அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்தது. இதற்கு பின்னணியில் பாஜக இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது.
எனினும் இதை அதிமுகவும், தமிழக பாஜகவும் மறுப்பு தெரிவித்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தேனியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர்தான் காரணம்
அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், பிரதமர் மோடி கட்டாயப்படுத்தியதன் பேரில்தான் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது. மேலும் நான் அமைச்சரவையில் இணைய மாட்டேன் என்று கூறியதற்கு கட்டாயம் இணைய வேண்டும் என்று கூறியதால் மட்டுமே நான் துணை முதல்வராக உள்ளேன்,
எல்லா பதவிகளும்...
பெரும்பாலும் எல்லா பதவிகளையும் நான் வகித்து விட்டேன். ஜெயலலிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார் என்றார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் அதிமுக இணைப்பிற்கு பிரதமர்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறியதை ஊர்ஜிதப்படுத்தியது போல் இருந்தது ஓபிஎஸ் கருத்து.
சேலத்தில் பேச்சு
இதுகுறித்து சேலத்தில் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட முதல்வரிடம் கேட்டதற்கு ஓபிஎஸ் கூறியது பற்றி தனக்கு எதும் தெரியாது என்றார். ஆனால் இன்று கோவையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வரிடம் மீண்டும் ஓபிஎஸ் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
பொய்
முதல்வர் எடப்பாடி கூறுகையில், எனக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்துதான் கட்சியை வளர்க்கிறோம். ஆனால் ஒரு சிறிய வார்த்தை கூறினாலும் அது பெரிதாக்கப்படுகிறது. அதுபோல் ஓபிஎஸ் கூறிய கருத்தும். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையீடு இல்லை. எனவே அவ்வாறு இருந்ததாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியதில் உண்மையில்லை என்றார் எடப்பாடியார்.