தனிக்கட்சி அறிவிப்பா, அரசியல் கட்சிக்கு ஆதரவா... 31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!
Recommended Video
சென்னை: கமலஹாசன், விஷால் ஆகியோர் ஏற்கனவே அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில், ரஜினியும் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் 5 நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதியன்று, ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து வெளிப்படையாக, தெளிவாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதுவரைக்கும் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை, மேலே உள்ளவன் சொல்லும்போது தெரியும், போர் வரட்டும் பார்க்கலாம்.. இப்படியெல்லாம் பேசியுள்ளார் ரஜினி.
ஆனால், இந்தமுறை அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாயுள்ளது என்கிறார்கள் அவரது முகாமைச்சேர்ந்தவர்கள். ரஜினியின் தயக்கத்திற்கு வியூகம் அமைக்க காலம் எடுத்துக்கொண்டதே காரணம் எனச் சொல்லப்பட்டது.
ரஜினியின் தெளிவு
இன்று அதை ரஜினியே நேரடியாக சொல்லியுள்ளார். ரஜினியின் உடல்மொழி, தெளிவான பேச்சு ஆகியவை அவர் முழுமையாக அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது. முன்னாள் சொன்னா கேட்கமாட்டோம், பின்னால சொன்னாத்தான் சீரியஸாக எடுத்துக்கொள்வோம் என்ற ரஜினியின் பேச்சில் பல அர்த்தங்கள் உள்ளது.
தனிக்கட்சிக்கே 90 % வாய்ப்பு
அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள, ரஜினிக்கு முன்புள்ள 3 வாய்ப்புகள். ஒன்று தனிக்கட்சி, அல்லது தேசிய கட்சிகளுக்கு ஆதரவாக முடிவெடுப்பது. அல்லது நற்பணி மன்றம் என்பது போல் சமூக இயக்கம் தொடங்குவது இந்த மூன்றுதான். இதில் தனி அரசியல் கட்சி தொடங்குவதிற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அவரது முகாமைச் சேர்ந்தவர்கள்.
பாஜகவுடன் சேர்வாரா?
ஒருவேளை, நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றால், சமூக இயக்கம் தொடங்கி தேர்தல் நேரத்தில் விருப்பமான அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. பாரதிய ஜனதாவின் தலைமைக்கு நெருங்கியவர் ரஜினி. என்றாலும், கடந்த சில மாதங்களாக நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில் பாஜகவுடன் எந்த உடன்பாடும் எட்டவில்லை எனவே அந்தக்கட்சியில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தில் மூத்த நிர்வாகிகள்.
தனிவழி அரசியல்
எந்த தயக்கமும் இன்றி, நடிகர் விஷால் அரசியலில் குதித்துள்ளதை ரஜினி வியப்பாக பார்த்துள்ளார். அதேபோல், கமல்ஹாசனின் அரசியல் டுவிட்டுகளையும் ரஜினி கூர்ந்து கவனித்துவருகிறார். ஆனால், தனக்கென ஒரு வியூகத்தை அமைத்து, என்வழி தனிவழி என்ற ஸ்டைலில் அரசியல் குதிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள்.