For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தருமபுரி மாணவிகளை எரித்துக்கொன்றவர்கள் எதையும் செய்வார்கள்: இளங்கோவன் காட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற அதிமுகவினர் எதையும் செய்ய அஞ்சமாட்டார்கள் என்பதால், என்மீது கொலைமிரட்டல்விடுத்த அதிமுக நபரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கை:

Elangovan asks TN govt to take action against Aiadmk party man

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது, நான் ஆற்றிய உரையை கண்டித்து தமிழகம் முழுவதும் எனது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.

உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் அ.தி.மு.க.வின் ஆதரவோடு, காவல்துறையினர் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது. உருவ பொம்மை எரித்தவர்களை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் சில இடங்களில் பழிவாங்கும் நோக்கத்தோடு காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் மதுவிலக்குக்கு ஆதரவாக கொழுந்துவிட்டு எரியும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கரை புரண்டு ஓடுவதை தடுத்து திசைத் திரும்பும் வகையில் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்துகிறார்கள். எனது கருத்துக்கு பதில் கருத்து கூறாமல் சத்தியமூர்த்தி பவனை தாக்குவது, எனது வீட்டை முற்றுகையிடுவது ஜெயலலிதாவின் அராஜக சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே நடந்த போராட்டத்தில் உருவ பொம்மை எரிக்கிற போது அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவர் நாங்கள் உருவ பொம்மையை மட்டும் எரிக்கிறவர்கள் அல்ல. இளங்கோவனையே உயிரோடு எரிப்போம் என்று உரக்கக் குரலில் கூறியதை தொலைக்காட்சிகள் பதிவு செய்து ஒளிபரப்பி உள்ளன.

உண்ணாவிரத போராட்டத்தில் நான் பேசியதற்காக என்மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அ.தி.மு.க. அரசு எனது உயிரை பறிக்க குரல் கொடுத்த அர்ஜூனன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் பயணம் செய்த பஸ்சை தருமபுரியில் தீயிட்டு கொளுத்தி 3 மாணவிகளை உயிரோடு எரித்தவர்கள் அ.தி.முக.வினர் என்பதை எவரும் மறந்திருக்க முடியாது. அந்த கொடிய படுகொலையை செய்த அ.தி.மு.க.வினர் தற்போது எதையும் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர்களது கொலைவெறியை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, அராஜக சக்திகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அச்சுறுத்தப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வின் போராட்டத்தை கண்டு அஞ்சப் போவதில்லை. எத்தகைய போராட்டத்தை அ.தி.மு.க. நடத்தினாலும் அதை களத்தில் சந்திக்க தமிழக காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

English summary
Congress party chief Elangovan asks TN govt to take action against Aiadmk party man who threaten to burn Elangovan alive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X