பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: செங்கல்பட்டு - அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு-அரக்கோணம் பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் (இன்று) 24, 25, 26, 28 மற்றும் 29-ந் தேதிகளில் (5 நாட்களுக்கு) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வ.எண்:66042), செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (66042), திருமால்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் இயக்கப்படும். மேலும் அரக்கோணம்- சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.