சிங்கிளாக கோவையில் சிகிச்சை பெற்ற பெண் யானை குட்டியுடன் வனத்திற்கு சென்றது
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானை குணமடைந்ததை அடுத்து குட்டியுடன் கோவை வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை: கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானை குணமடைந்ததையடுத்து, குட்டியுடன் அந்த யானை வனத்திற்குள் கொண்டு விடப்பட்டது.
கோவை அருகே பெரியதடாகம் மாங்கரை வனப்பகுதியில் விஷச்செடியை தின்ற பெண் யானை ஒன்று கீழே மயங்கி விழுந்தது. அந்த யானையை கிரேன் உதவியுடன் தூக்கிச் சென்று சாடிவயல் யானைகள் முகாமில் வனத்துறையினர் ஒருவாரமாக சிகிச்சை அளித்து வந்தனர்.
கிரேன் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றி சாடிவயல் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஜீரணமடைய பசு தீவனங்கள், பச்சை இலைகள், குளூகோஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி, சிகிச்சை பெற்று வந்த பெண் யானை சாடிவயல் முகாமில் ஒரு ஆண் குட்டி யானையை ஈன்றது. தொடர்ந்து யானைக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பெண் யானையின் உடல்நலம் தேறியது.
இதனை தொடர்ந்து குட்டியுடன் பெண் யானை நேற்று முகாமில் இருந்து சாடிவயல் அருகேயுள்ள வனத்திற்குள் விடப்பட்டது. யானையின் செயல்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போளூவாம்பட்டி ரேஞ்சர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
முள்ளாங்காடு வனப்பகுதிக்குள் யானை சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கிளாக சிகிச்சை பெற்று வந்த பெண் யானை தனது ஆண் குட்டியுடன் மகிழ்ச்சியுடன் வனத்திற்கு சென்றதைப் பார்த்து வன ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.