கடலூர்,புதுச்சேரி வரை பரவிய 'எண்ணூர்' கச்சா எண்ணெய்.. மீனவர்கள் கடும் பாதிப்பு
எண்ணூர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதி கொட்டிய கச்சா எண்ணெய் கடலூர் மற்றும் புதுச்சேரி வரை பரவியுள்ளது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்: எண்ணூர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் கச்சா எண்ணெய் கொட்டியது. அந்த எண்ணெய் படலம் கடலூர் மற்றும் புதுச்சேரி வரை பரவி அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
சென்னை அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த மாதம் 28ம் தேதி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும், எரிவாயு ஏற்றி வந்த கப்பலும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை கடல்பகுதியில் கச்சா எண்ணெய் பரவியது.

இதனால் கடல் பெருமளவில் மாசடைந்தது. கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மீன்களை வாங்கி உண்ண மக்கள் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, வாளி உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு எண்ணெய் அகற்றும் பணி முடிக்கப்பட்டதாக துறைமுக அதிகாரிகளும், தமிழக அரசும் அறிவித்தது.
முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது எண்ணெய் படலம் என்று கருதி இருந்த நிலையில், இந்த எண்ணெய் படலம் கடலூர், புதுச்சேரி வரை பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள கடற்கரை ஓரங்களில் கருப்பு நிறத்தில் கச்சா எண்ணெய் ஒதுங்கி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை போன்றே கடலூர், புதுவை பகுதிகளிலும் பொதுமக்கள் மீன் வாங்கி சாப்பிட அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பகுதியில் கச்சா எண்ணெய்யை அகற்றியது போன்றே கடலூர் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளிலும் மாநில அரசுகள் தலையிட்டு எண்ணெய் படலத்தை அகற்றப்பட வேண்டும் என்று மீனவர்களும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications