தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம், 'மக்களின் தலைமைச் செயலாளர்' தொடர்கிறார்..!
சென்னை: தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரே தவிர, 'மக்களின் தலைமைச் செயலாளர்' ஷீலா பாலகிருஷ்ணன் இன்னும் அதே பதவியில்தான் தொடருகிறார்.
தமிழக அரசின் 42வது தலைமைச் செயலராக கடந்த மார்ச் மாதம் மாதம் மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். இன்று அவர் மாற்றப்பட்டு அண்ணா குடிமையியல் பயிற்சி மையத்துக்கு (ஐ.ஏ.எஸ் அகாடமி) மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலரான ஞானதேசிகன் தமிழக மின்வாரியத்தின் தலைவராக இருந்தவர். தற்போது மின்வாரியத்தின் புதிய தலைவராக சாய்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தலைமைச் செயலாளரின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அதே பதவியில்தான் தொடருகிறார். இவரைத்தான் தலைமைச் செயலக வட்டாரத்தில் மக்களின் தலைமைச் செயலாளர் என்று அழைக்கிறார்கள்.
முதல்வர் என்ற அதிகாரம்மிக்க பதவியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருக்கும் நிலையில், அதிமுக தொலைக்காட்சியும், அதிமுக தொண்டர்களும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று அழைக்கிறார்கள்.
தலைமைச் செயலாளர் என்ற பதவியும் அதிகாரிகளில் உயர்ந்த பதவியாகும். போலீஸ் அதிகாிகள் முதல் அனைத்து வகை அரசு அதிகாரிகளின் தலைவர் தலைமைச் செயலாளர்தான். ஆனால் அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்த மோகன் வர்கீசுக்கு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு அவர் டம்மியாக வைக்கப்பட்டிருந்தார்.
ஒருவேளை, பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை நிர்வகிக்கும் திறமை இல்லை என்று ஜெயலலிதா நினைத்ததை போல மோகன் வர்கீசுக்கும் தலைமைச் செயலாளராக செயல்பட திறமையில்லை என்று நினைத்துவிட்டார் போலும். மோகன் வர்கீசுக்குதான் அந்த திறமை இல்லை என்று நினைத்திருந்தார் என்றே வைத்துக்கொள்வோம், இப்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானதேசிகனுக்கும் திறமை கிடையாது என்று மக்களின் முதல்வர் நினைக்கிறாரா?
ஏனெனில் தலைமைச் செயலாளரின் ஆலோசகராக உள்ள ஷீலா பாலகிருஷ்ணன் இப்போதும் அதே பதவியில் தொடருகிறாரே? அப்படியானால் அனுபவம் இல்லாதவர்களை, திறமை குறைந்தவர்களைத்தான் மாநில அரசின் உயர் பதவியான தலைமைச் செயலாளர் பதவிக்கு இந்த அரசு கொண்டு வருகிறதா? அப்படியானால் தமிழகத்தில் திறமை மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லாமல் போய்விட்டனரா? வேறு மாநிலங்களில் மட்டும் எப்படி ஆலோசகர்கள் இல்லாமல் ஆட்சி நடக்கிறது? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்களிடம் எழும்பாமல் இல்லை.
தமிழக போலீஸ் டி.ஜி.பி அசோக்குமாருக்கு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் ராமானுஜம் மக்களின் டிஜிபியா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது.