தமிழகத்தில் தலைகீழா நின்றாலும் கூட்டணி ஆட்சி கிடையாது: பாஜகவுக்கு அதிமுக தம்பிதுரை பொளேர் பதிலடி!
சென்னை: தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அண்ணா திமுக, தனித்துதான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையிலும் கூட அதிமுக தனித்துதான் ஆட்சியை அமைக்கும் என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று தம்பிதுரை கூறியதாவது: 1998-ம் ஆண்டு திமுகவை தோற்கடிக்க பாஜக கூட்டணி அவசியம் என்று ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். இதனடிப்படையில்தான் வாஜ்பாய், அத்வானியை நான் சந்தித்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு தரும் என கூறினேன். அப்போது வாஜ்பாய் ஆச்சரியப்பட்டார். ஒரு திராவிட கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா? என கேள்வி கேட்டார் வாஜ்பாய். ஆம் உண்மைதான்; திமுகவின் அராஜ ஆட்சியை ஒழிக்கவே கூட்டணி வைக்கிறோம் என்று சொன்னோம். அதனடிப்படையில்தான் அப்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது.
திமுக- பாஜக கூட்டணியும் அதிமுகவும்
அதே காலகட்டத்தில், முதல்வராக இருந்த கருணாநிதி, டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாயை சந்தித்து காவிரி பிரச்சனை பற்றி பேசினார். ஆனால் ஜெயலலிதாவை அழைக்கவில்லை. இதனால் ஜெயலலிதா, பாஜக கூட்டணியில் நாம் இருக்கிறோம்.. தமிழ்நாட்டு உரிமையை வாஜ்பாயிடம் கருணாநிதி விட்டுக் கொடுத்துவிட்டதால் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள் என்றார். அப்போது சட்டம், போக்குவரத்து துறை அமைச்சராக நான் பதவி வகித்தேன். மத்திய அமைச்சரவையில் எனக்கு அப்போது 5-வது இடம். ஆனாலும் காவிரி பிரச்சனைக்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தோம்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அப்போது வெளியே வந்த உடனேயே திமுக கூட்டணி அமைத்து கொண்டது.
சந்தர்ப்பவாத திமுக கூட்டணி
திமுக- பாஜக கூட்டணி 5 ஆண்டுகள் நீடித்தது; அந்த கூட்டணி அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. அன்று பாஜக கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தது, பொருந்தும் கூட்டணியா? பொருந்தாத கூட்டணியா? என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் மாமா, முரசொலி மாறன்- பாஜக கூட்டணி அரசில்தான் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு 2004-ம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது திமுக. இப்படி சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதுதான் திமுகவின் கொள்கையாகும்.
எடப்பாடி பழனிசாமி சரியான முடிவு
அதிமுக, கொள்கைக்காக- தமிழ்நாட்டு நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அந்த கூட்டணி வேண்டாம் என பின்னர் ஜெயலலிதா வெளியே வந்தார். அதே வழியில், எடப்பாடி பழனிசாமி ஒரு சரியான முடிவு எடுத்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
ரூ30,000 கோடி ஊழல்
தமிழ்நாட்டின் அவலநிலை அனைவருக்கும் தெரியும். திமுகவின் குடும்ப அரசியல், ஊழல் அனைவருக்கும ்தெரியும். சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி தரும் போது, ரூ30,000 கோடி ஊழல் தமிழ்நாட்டில் நடந்ததாக சொல்லி இருக்கிறார்.
அமித்ஷா வழக்கு போட துணிவு உள்ளதா?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையை பேசுகிறவர்.ஊழல் செய்தேன் என்று சரியாக சொல்கிறவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் போது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றது உண்மை என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து அந்த பனத்தை திருப்பிக் கொடுத்தவர் செந்தில் பாலாஜி. அந்த செந்தில் பாலாஜி, ரூ40,000 கோடி ஊழல் நடந்ததாக கூட சொல்வார்கள் என்றார். அதைத்தான் அமித்ஷாவும் சொனனர். அமித்ஷா, ரூ30,000 கோடி ஊழல் நடந்ததாக கூறியது பற்றி திமுக இன்னமும் ஏன் வாய்திறக்காமல் இருக்கிறது? அப்படி சொன்ன மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு தொடர முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?
இஸ்லாமியர்களும் அதிமுகவும்
அதிமுக- பாஜக கூட்டணியால் இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்கிறீர்கள். வக்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்துக்கு வரும் முன்னரே அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.இஸ்லாம்யர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. ஜெயலலிதா காலத்தில் இருந்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அதிமுக நின்று வருகிறது. அதனால்தான் ராஜ்யசபாவில் வக்பு மசோதாவை அதிமுக எதிர்த்து வாக்களித்தது. இப்படி இஸ்லாமியர் உரிமையை பாதுகாக்கும் இயக்கம் அதிமுகதான். ஆகையால் இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை
1952-ம் ஆண்டு முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அல்லாத கட்சிகளே பெரும்பான்மை பெற்றன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத கட்சி எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போது கூட்டணி ஆட்சி அமையவில்லை. 1957,1962-ல் காமராஜர் இரு முறை ஆட்சி அமைத்தார்.. அப்போதும் கூட்டணி ஆட்சி கிடையாது.
திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி இல்லை
1967-ல் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைத்த போதும் கூட்டணி அரசு அமைக்கவில்லை.1977-ல் எம்ஜிஆரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை.
2006-ல் கருணாநிதி கையில் எடுத்த ஆயுதம்
2006-ல் திமுக 93 சீட்தான் வாங்கியது; திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி, சென்னைக்கு வருகை தந்தார்; கருணாநிதியிடம், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸை சேர்க்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி. ஆனால் கருணாநிதியோ, கூட்டணி ஆட்சி அமைத்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன்; 2004-ம் ஆண்டு திமுக செய்த உதவியை காங்கிரஸ் மறக்கக் கூடாது என சோனியாவிடம் சொல்லுங்கள் என்றார். இதனால் 2006-ல் கருணாநிதியே முதல்வராக இருக்கட்டும்; கூட்டணி ஆட்சி வேண்டாம் என்ரார் சோனியா காந்தி.
ஒருபோதும் கூட்டணி ஆட்சி இல்லை
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசமை தனியாகத்தான் ஆட்சி அமைப்பார்; கூட்டணி என்பதற்கு இட்மே கிடையாது. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததும் கிடையாது; இனிமேல் வரப்போவதும் கிடையாது. இதனைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆகவே, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒருபோதும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை; இனியும் கூட்டணி ஆட்சி அமைக்காது. இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
பின்னணி என்ன?
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் அமையும் என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அமித்ஷா அப்படி எல்லாம் சொல்லவே இல்லை; அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்கிறார். இதனையே இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications