சட்டசபையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல்தான் ஆளுநர் உள்ளாரா? ஸ்டாலின் கேள்வி
சென்னை: கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. எப்போது ஆட்சி அகற்றப்படும் என்ற எண்ணம் எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டு ஆளுநரை சந்தித்தோம். தேவையேற்பட்டால் குடியரசு தலைவரை மீண்டும் சந்திப்போம். இன்று மாலை ஆளுநரை மீண்டும் சந்திக்க உள்ளோம். அப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம்.
எதிர்க்கட்சி எம்எம்எல்ஏக்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு 119 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
சட்டசபையின் பெரும்பான்மை கணக்கு கூட தெரியாமல்தான் மாநில ஆளுநர் உள்ளாரா? அவருக்கு அனைத்தும் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அரசே காரணம். கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர என்றைக்குமே திமுக தயாராக இல்லை . இவ்வாறு அவர் கூறினார்.