மறக்க முடியாத அந்த 7 நாட்கள்.. மதுரை அனுபவம் குறித்து மனம் திறந்த இளங்கோவன்
மதுரை: மதுரை அனுபவத்தை மறக்க முடியாது. நான் மதுரையில் இருந்த அந்த 7 நாட்களும் எண்ணற்ற தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்னாள் ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அறக்கட்டளை மேலாளர் நாராயணன் ஆகியோர் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கி இருந்த இளங்கோவன் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டார்.
இந்த நிலையில், அவருடைய முன்ஜாமீன் நிபந்தனையை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டது. இதையடுத்து மதுரையில் தங்க வேண்டிய கட்டாயம் நீங்கியது. இந்தச் சூழ்நிலையில் நேற்று 7வது நாளாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட இளங்கோவன் அதை முடித்துக் கொண்டு நேராக தமுக்கம் மைதானம் சென்றார். அங்கு நடந்து வரும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர் சில புத்தகங்களையும் வாங்கினார்.
அதன் பின்னர் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிபந்தனை முன் ஜாமீனில் மதுரையில் தங்கி இருந்த கடந்த 7 நாட்களும் மறக்க முடியாதவை. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கட்சி தொண்டர்களுடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் நான் புத்தகம் எழுதும் அளவுக்கு அடக்குமுறைகளை சந்திக்கவில்லை. என் மீது தொடுக்கப்படும் மிகப்பெரிய அடக்கு முறைகளை சந்திக்க தயாராக உள்ளேன்.
என்னை முடக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று பொய் வழக்கு போட்டனர். தற்போது நானும் தொண்டர்களும் எழுச்சியுடன் உள்ளோம்.
மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அக்கோரிக்கை அப்படியேதான் உள்ளது. மது விலக்கு கோரும் போராட்டத்தை மீண்டும் தொடர கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார் இளங்கோவன்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை கிளம்பி வந்து விட்டார் இளங்கோவன்.