டெல்லியில் முகாமிட்டுள்ள "பஞ்சாயத்து".. அவசரமாக விரைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அத்தனை கோஷ்டிகளின் தலைவர்களும் மொத்தமாக திரண்டு டெல்லியில் போய் உட்கார்ந்திருப்பதால் இளங்கோவன் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றத்தான் தலைவர்கள் அலைகிறார்கள் என்று இந்த கோஷ்டிகளின் முயற்சி குறித்து கருத்து தெரிவித்திருந்த இளங்கோவன் தற்போது நிலைமை சற்று கவலைக்கிடமாக மாறி வருவதை உணர்ந்துதான் டெல்லிக்கு ஓடியுள்ளார் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இளங்கோவனை மாற்ற வேண்டும், அவர் கட்சித் தலைவர்களை அரவணைப்பதில்லை என்ற புகார்களுடன் டெல்லியில் ப.சிதம்பரம், குமரி அனந்தன், தங்கபாலு உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களும் முகாமிட்டுள்ளனர்.
துணைத் தலைவர் ராகுல் காந்தியை முதலில் பார்த்து புகார் கூறினர். இன்று கட்சித் தலைவர் சோனியா காந்தியைப் பார்த்தும் பேசி விட்டனர். இதனால் இளங்கோவன் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இளங்கோவன் அவசரமாக டெல்லி கிளம்பிச் சென்றுள்ளார். கட்சி மேலிட அழைப்பின் பேரில் அவர் போயுள்ளதாக ஒரு தகவலும், அவரே கிளம்பிப் போயிருப்பதாக இன்னொரு தகவலும் கூறுகிறது. இளங்கோவன் தப்பிப்பாரா அல்லது பதவியிலி்ருந்து தூக்கப்படுவாரா என்பது தெரியவில்லை.