ஜல்லிக்கட்டு வன்முறை… நீதிபதி ராஜேஷ்வரன் அலங்காநல்லூரில் விசாரணை
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் மதுரை, அலங்காநல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டார்.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் போலீஸ் நடத்திய தாக்குதல் குறித்து நீதிபதி ராஜேஷ்வரன் தமுக்கம், செல்லூர் ரயில்வே பாலம், ரயில் நிலையம், அலங்காநல்லூர் கேட்டு கடை, வாடிவாசல் ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணிக்கு நீதிபதி ராஜேஷ்வரன் கள ஆய்வை நடத்தியுள்ளார்.
இந்த 5 இடங்களில் தான் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இங்கு யாரெல்லாம் போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கான சான்றுகள் மற்றும் புகைப்படங்கள், மாவட்ட நிர்வாகங்கள் என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டது என்பதற்கான ஆவணங்களை நீதிபதி ராஜேஷ்வரன் போலீசாரிடம் கேட்டுப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நீதிபதி ராஜேஷ்வரன் கூறியதாவது:
முதலில் சென்னையில் விசாரணை தொடங்கியது. பின்னர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் விசாரணையை முடித்துக் கொண்டு மதுரையில் விசாரிக்கிறேன். தமுக்கம் பகுதி, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் விசாரணையை மேற்கொண்டு வருகிறேன்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்த இடம், வாடிவாசல் உள்ளிட்டவை முதலில் பார்வையிடப்படும். இதற்கு பின்னர், சென்னையில் பத்திரிகையில் விளம்பரம் ஒன்று அளிக்க உள்ளோம். அதில் பாதிக்கப்பட்டவர்கள், பார்த்தவர்கள் என எல்லோரும் ஒருநாள் அழைக்கப்படுவார்கள். அனைவரும் வந்து பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அப்போது நேரடி விசாரணை நடத்தப்படும்.
இதே போன்று மதுரை, கோவை, சேலம் அங்கேயும் விசாரணை குழு விசாரணை மேற்கொள்ளும். அப்போதும் பத்திரிகையில் விளம்பரம் தரப்படும். இந்த இடங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள், பார்த்தவர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் பங்கேற்று புகார் தெரிவிக்கலாம். மக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம்.
பத்திரிகை மூலம் விளம்பரம் அளித்து மக்களிடம் நேரடி விசாரணையில் ஈடுபட இன்னும் 10 நாட்கள் எடுக்கும். அதற்கு முன்பாக பிரச்சனைக்குள்ளான இடங்களை பார்வையிட்டு வருகிறோம் என்று நீதிபதி ராஜேஷ்வரன் கூறினார்.
இந்த விசாரணை கமிஷன் தனது அறிக்கையை 3 மாதத்திற்கு தமிழக அரசுக்கு சமர்பிக்கும்.