பிரசாதம் கொண்டு சென்ற கோகுல இந்திராவுக்கு அப்போலோவுக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அப்போலோ மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு தீவிர தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்றும் வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என்றும் அதிமுகவினர் யாகம், பூஜை என பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பே பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு பூஜையை நடத்தினர். இந்த பூஜையில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
பூஜை முடிந்த பின்னர், பிரசாதத்தை கோகுல இந்திரா எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் 2ம் தளத்திற்கு சென்றார். ஆனால், அவர் 1ம் தளத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், பிரசாதத்திற்கெல்லாம் அனுமதி இல்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் முகம் சோர்ந்த நிலையில் வெளியே வந்தார் கோகுல இந்திரா.