"சுவர் எறி குதித்தவர்.." திமுக அமைச்சர் சொன்ன ஒற்றை வார்த்தை.. கடுப்பான ஓ.எஸ்.மணியன் பரபர பதிலடி
மயிலாடுதுறை: சீர்காழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமுக அமைச்சர் குறித்துப் பரபர கருத்துகளை முன்வைத்தார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்தது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழை சமயத்தில் தான் பெரும்பாலான மழையைப் பெய்யும்.
பருவமழை தொடங்கிய போது சென்னையில் சில நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. இருப்பினும், அதன் பின்னர் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை.
திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி! செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ.! புது லிஸ்டை அறிவித்த துரைமுருகன்!
மழை
தமிழகத்தில் கடந்த வாரம் இயல்பைக் காட்டிலும் வடகிழக்கு பருவமழை சற்றே குறைந்துள்ளதாகவே வானிலை மையம் தெரிவித்து இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது மிக மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், கரையை அடைவதற்கு முன்னரே அது வலுவிழந்தது. இதனால் சென்னையில் பெரியளவில் எங்கும் மழை இல்லை.
சீர்காழி
சென்னையில் பெரியளவில் மழை இல்லை என்ற போதிலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடி கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாகக் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது
ஆர்பாட்டம்
அதன்படி நேற்று முதல் சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதாது என்று அதை வழங்குவதைக் கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்கக் கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஓ.எஸ்.மணியன்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய மழை பாதிப்பிற்கு என்ன நிவாரணம் வழங்கக் கோரினாரோ? அதனை தற்போது வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக 3000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், விளைநிலங்களுக்கு ஏக்கர் 1க்கு 30000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
திமுக அமைச்சருக்குப் பதிலடி
மக்களால் புறக்கணிக்கப்பட்டு சுவர் ஏறிக் குதித்து ஓடியவர் என்று திமுக அமைச்சர் மெய்யநாதன் என்னைப் பற்றிக் கூறுவது ரொம்பவே தவறானது. அன்றைய தினம் என்ன நடந்தது எனத் தெரியாமல் பலரும் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அவர்கள் உடனடியாக இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். வாய்க்குப் பூட்டுப் போடப்படும்" என்று தெரிவித்தார்.