'நான்தான் டெல்லி ஏசி'... தூத்துக்குடியில் சிக்கிய 'டுபாக்கூர்' ஆசாமி!
தூத்துக்குடி: டெல்லியில் காவல்துறை உதவி ஆணையராக இருப்பதாக கூறி தூத்துக்குடி சிண்டிகேட் வங்கியில் கணக்கு தொடங்க முயன்ற ஒரு நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் மேகலிங்கம். இவரது மகன் ஆனந்த் என்ற சஞ்சய்குமார். இவர் மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு வீரர் ஆவார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த வாலிபால் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கிருந்த வந்த ஆனந்த் தான் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தகுதி மூலம் டெல்லி காவல்துறையில் உதவி ஆணையாளர் ஆக பணிபுரிவதாக தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆனந்த் தனது வாலிபால் விளையாட்டு மூலமாக வரும் பணத்தை தனது சம்பளப்பணம் என்று கூறி வீட்டில் சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தின் பெற்றோர் சம்பளத்தை வங்கி மூலமாக அனுப்புமாறு கூறினர்.
இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி தாளமுத்து நகரிலுள்ள உறவினர் வீட்டிற்கு ஆனந்த் வந்தார். உறவினரிடம் தனக்கு தூத்துக்குடிக்கு பணிமாற்றம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ஆனந்த் தனது உறவினருடன் தூத்துக்குடியிலுள்ள ஒரு வங்கியில் புதியதாக கணக்கு துவங்க சென்றார்.
அப்போது அவரது அடையாள அட்டையை சரிபார்த்த வங்கி மேலாளர் அதில் சந்தேகம் கொண்டார். ஆனந்திடம் வங்கி மேலாளர் காவல்துறை பணி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு ஆனந்த் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனையடுத்து வங்கி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வங்கிக்கு வந்த காவல்துறையினர் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்காகவே தன்னை காவல்துறை உதவி ஆணையாளர் என்று சொல்லியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் வேறு ஏதும் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications