ஈராக்கில் சிக்கித் தவிக்கும் தூத்துக்குடி செவிலியரை மீட்க பெற்றோர் கோரிக்கை
தூத்துக்குடி: ஈராக்கில் சிக்கித் தவிக்கும் தூத்துக்குடி செவிலியர் மோனிஷாவை மீட்டுத்தரக்கோரி தமிழக அரசுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் ஜெ.பிளாசிலோபஸ். அவருடைய மனைவி எட்விஜ் அம்மாள். இவர்களது 2-வது மகள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா (வயது 24) ஈராக்கில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தான் ஈராக் சென்ற மோனிஷா, திக்ரித் நகரில் உள்ள டீச்சிங் என்ற மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். அவருடன் கேரளாவை சேர்ந்த 45 நர்சுகளும் பணியாற்றி வருகின்றனர்.

உள்நாட்டுப்போர்
ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில் தீவிரவாதிகளின் பிடியில் திக்ரித் நகரம் சிக்கி இருக்கிறது. இதனால் திக்ரித்தில் உள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத நிலை உருவாகி உள்ளது.

செவிலியர்கள் தவிப்பு
மோனிஷா பணியாற்றும் மருத்துவமனையின் வெளியில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் அனைத்திலும் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர்.

மகளை மீட்க வேண்டும்
இதனால் மோனிஷாவின் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். ஈராக்கில் சிக்கித்தவிக்கும் தங்கள் மகளை மீட்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

46 பேர் தவிப்பு
இதுகுறித்து மோனிஷாவின் தாய் எட்விஜ் கூறியதாவது:-
எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு என்னுடைய 2-வது மகள் ஈராக் நாட்டுக்கு சென்று அங்கு திக்ரித் நகரில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்த நகரம் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருப்பதால் கடந்த 9-ந் தேதி முதல் மோனிஷா உள்பட 46 செவிலியர்கள் வீட்டில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

செல்போனில் பேச்சு
மோனிஷா என்னுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நாங்கள் நலமாக இருக்கிறோம். எந்த பிரச்சினையும் இல்லை. இந்திய தூதரக அதிகாரிகள், செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் எங்களை நேரில் சந்தித்து பேசினர் என்று கூறினார். எங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர், ஆனால் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் நாங்கள் தவிக்கிறோம். எங்களை பத்திரமாக ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார்.

முதல்வருக்கு கோரிக்கை
இதைத்தொடர்ந்து நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். அதன்பேரில் எங்கள் மகளை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

கல்விக்கடன்
இதனிடையே தொலைபேசியில் பேசிய மோனிகா, கடன் வாங்கித்தான் படித்தேன். இந்த கடனை அடைப்பதற்காகவே ஈராக் வந்தேன். நான்கு மாதங்களாக எங்களுக்கு சம்பளம் தரப்படவில்லை. சம்பளம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சிறப்பு தூதர் தெரிவித்தார் என்று கவலையுடன் கூறியுள்ளார்.

கடன் தள்ளுபடியாகுமா?
தற்போது உள்ள நிலையில், நாடு திரும்பினால் என்னால் கல்விக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படும். என்ன செய்து என்றே தெரியவில்லை. இதனால், மத்திய, மாநில அரசுகள் எனது கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மோனிகா கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications