கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் கருகி நாசம்.. மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்த பயிர்கள் கருகி நாசமாகின. இதனால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி: நீர் இன்றி பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மரணம் செய்து கொள்வது தொடர்கதையாக மாறிவிட்டது. இன்றும் தேனியில் விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. தமிழகத்தை வடகிழக்கு பருவ மழையும் பழிவாங்கி விட்டது. இதனால் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சிக்கு விவசாயிகள் பலியாவது தொடர்ந்து வருகிறது.

இன்று காலை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர் கருகிய மன உலைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி அருகில் எருமலைநாயக்கன்பட்டியில் வசித்து வந்த விவசாயி மங்கலஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதான இவர் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார். நீரின்றி பயிர்கள் கருகியதால் வாங்கியக் கடனைக் கூட கட்ட முடியாமல் போய்விட்டதே என்ற மனக் கவலையில் வயலில் தெளிக்க வாங்கி வைத்திருந்த மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications