காதலனுடன் ஓடிய மகள்.. வேதனையில் உயிரை மாய்த்த தந்தை
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காதலனுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் வேதனையும், அவமானமும் அடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் அருகே உள்ள சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் ஒரு விவசாயி. இவரது மகள் இளவரசி. 20 வயதான அவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும், அதே ஊரைச் சேர்ந்த 22 வயது விக்னேஷும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதலுக்கு வீடுகளில் சம்மதம் கிடைக்காது என்று இருவரும் அஞ்சினர். இந்த நிலையில், 20-ந் தேதி இளவரசி, கரும்பூரில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
அப்போதுதான் விக்னேஷ் - இளவரசி இடையிலான காதல் குறித்து பன்னீர் செல்வத்துக்குத் தெரிய வந்த்து. இதனால் அவர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதையடுத்து பன்னீர் செல்வம் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜாதிக் கலவரம் மூண்டு விடாமல் தடுக்க போலஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.