மனைவி நடத்தையில் சந்தேகம்: மாம்பழத்தில் விஷம் கலந்து மகளை கொன்ற தந்தை கைது
நீலகிரி: கோத்தகிரி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர், தனது மகளின் முகச்சாயல் மாறியதால் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் குமார் (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (28), மகள்கள் தனுஷ்யா (7), புவனா (4).கொங்கர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தனுஷ்யா அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், அம்பிகாவின் நடத்தையில் குமார் சந்தேகப்பட தொடங்கினார். இதனார் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அம்பிகா கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தனுஷ்யா மட்டும் குமாருடன் இருந்து பள்ளி சென்று வந்துள்ளார்.
கடந்த மாதம் 10 தேதி தனுஷ்யா திடீரென மயங்கி விழுந்து இறந்தார். பள்ளிவிட்டு வரும் போது பழம் வாங்கி கொடுத்ததாகவும், அதில் ஃபுட்பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் குமார் கூறினார். இதுதொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
தனுஷ்யாவின் பிரேத பரிசோதனையில், அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குமாரே மகளுக்கு பழத்தில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரிடம் சரணடைந்த குமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது வாக்குமூலம் கொடுத்த குமார், தனுஷ்யா முக சாயல் வேறு மாதிரி இருந்ததால் எனது மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
குழந்தை இருப்பதால் தானே உறுத்தல் ஏற்படுகிறது. கொன்று விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என முடிவு செய்தேன். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும், தனுஷ்யாவை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றேன்.
மாம்பழமும், சீதா பழமும் வாங்கினேன். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை அதில் வைத்து தனுஷ்யாவிடம் சாப்பிட கொடுத்தேன். அவள் சாப்பிட்டதும், வீட்டுக்கு கூட்டிச் செல்லாமல் ஊருக்குள்ளேயே அலைக்கழித்தேன்.
நீண்ட நேரம் கழித்து வீடு அருகே வந்ததும் தனுஷ்யா மயங்கி விழுந்தாள். பழம் புட்பாய்சனாகி விட்டதாக கூறி நாடகமாடினேன். ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மை தெரிந்து போலீசார் என்னை தேடியதால், சரண் அடைந்து விட்டேன். இவ்வாறு குமார் தெரிவித்தார்.