டெங்குவை ஒழித்து நலமான தமிழகம் உருவாக்குவோம் - ஜெ.பாணியில் எடப்பாடியார் வாட்ஸ் அப் பேச்சு
ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம். நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று வாட்ஸ் அப் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு நோயை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுக்கும் ஆடியோ வாட்ஸ்அப் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மழை வெள்ளத்தின் போது கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ் அப்பில் பேசினார். அதே பாணியில் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெங்கு ஒழிப்பு பற்றி பேசியுள்ளார்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் பேசிய பேச்சு வாட்ஸ்அப் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெங்கு காய்ச்சல் பற்றி பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்,அனைவருக்கும் வணக்கம். டெங்கு கொசு நல்ல தண்ணீரில்தான் வளருகிறது. இந்த கொசு பகலில்தான் கடிக்கிறது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், வீடுகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.
அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவிகள் உள்பட அனைத்து வசதிகளும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்க வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்போம், டெங்கு காய்ச்சலை தடுப்போம். நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications